மிதிவெடி அபாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திறன்அரங்க இயக்கம்
தேவானந்த்
இடர்கள் கெடுக சிறார்களுக்கான ஆற்றுகை சில பதிவுகள்
அகதிகள் புனர்வாழ்வு அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மிதிவெடி ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வைச் சிறார்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஓர் அம்சமாக செயல் திறன் அரங்க இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ஒரு ஆற்றுகை நிகழ்வினை அண்மையில் யாழ். கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் காண நேர்ந்தது.
ஆற்றுகையின் நோக்கினை மையப்படுத்திய அவர்களின் நகர்த்தல் முறை பெரிதும் மனதைக் கவர்கின்ற அறிவு பூர்வமான உளம் சார் தொழிற்பாடாக இருந்தமை பாராட்டுக்குரியதாக இருந்தது. அதே பொழுதில் கற்பித்தல், நடவடிக்கையில் செய்யப்பட வேண்டிய சில மாறுதல்கள் பற்றிய தேவையை எடுத்துக் காட்டுவதாகவும் அந்த நிகழ்வுகள் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
“கற்பித்தல்” என்னும் கிரியையினை ஆற்றும் ஒருவர் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டிய தனித்தன்மைகள் எவையென்றதை – அதிலும் குறிப்பாக சிறுவர்களை வழிநடத்தும் பொறுப்பிலுள்ளவர்களின்பால் அமைந்திருக்கவேண்டிய திறன்கள் எவை என்பதை இந்த ஆற்றுகை மூலம் உணர முடிந்தது.
எடுத்துக் கொண்ட மையக்கருத்துப் பற்றிய தளத்துக்கு நகர்வதற்கு முன்னர் சிறுவர்களை உடல் உளரீதியாகத் தயார் செய்தல் – ஒரு கருத்தை உள்வாங்கிக் கொள்ளும் உடல் மற்றும் உளம் சார்ந்த பக்குவத்துக்கு அவர்களைக் கொண்டு வருதல் என்னும் நோக்கம் சார்ந்த தொழிற்பாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியவை.
விளையாட்டு, பாடல் செயற்கை இறுக்கத்தை முற்றாகத்தவிர்த்துக் கொண்ட உரையாடல் (இது விளையாட்டு, பாடல் என்பவற்றிலும் கைக் கொள்ளப்பட்டது) என்னும் நடவடிக்கைகள் சிறுவர்களின் உள்ளுலகத்தை வெளிக் கொணர்ந்து அவர்களின் இயல்பான தன்மை என்னும் இறுக்கமற்ற மனோநிலைக்கு அவர்களை இட்டுச் சென்றன. இதனைத் தொடர்ந்தே மையக் கருத்துச் சார்ந்த ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.
தவிர்க்கப்படவேண்டிய – எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ஒரு விடயம் குறித்துச் சிறுவர்களை விழிப்படைய வைக்க விரும்பும் நாம் கண்டிப்பான எச்சரிக்கை சில சமயங்களில் மிரட்டல் அல்லது பயமூட்டல் கொண்ட அறிவுறுத்தல் என்பவற்றைத்தான் வழிமுறையாகக் கைக்கொண்டு வருகிறோம். சில சமயங்களில் அன்பாகவும் அறிவுறுத்துவதுண்டு. நாம் சொல்ல வரும் விடயம் பற்றி அவர்களின் மனத்தில் சார்பு நிலைச்சிந்தனை அல்லது அவர்களின் உள்ளார்ந்தம் ஆர்வம் என்பவற்றைப் பற்றி நாம் எள்ளளவும் கவனம் கொள்வதில்லை. இது ஒரு உள நிலை சார் nhழிற்பாடு ஆகும். (இந்த இடத்தில் இதுபற்றி விரிவாகக்குறிப்பிட முனைவது இக்கட்டுரையை மிக நீட்டுவதாய் அமையுமென்பால் ஆற்றுகை பற்றிய பேச்சுக்கு வருகிறேன்)
மிதிவெடி ஆபத்துக்கு உட்பட்ட சில பாத்திரங்களின் நிலையைக் காட்டி-முன்பு அவர்கள்வாழ்ந்த மகிழ்ச்சிகரமான வாழ்வை நினைவு கூர்ந்து பின் இப்போதிருக்கும் நிலை பற்றிய துக்கத்தில் வெளிப்பாட்டோடு முடியும். இந்த நிகழ்வு மிதிவெடி ஆபத்துக்கள் பற்றிய விழிப்பையும் எச்சரிக்கை உணர்வையும் சிறுவர் மத்தியில் ஊட்டியிருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
இந்த நிகழ்வு தொர்பாகவும் பங்கேற்போரின் கருத்துப் பரிமாற்றத்தின் பின்னரும் மனதிற் பட்ட சில எண்ணங்களையும் இங்கு சொல்ல வேண்டும். சிறுவரின் உளநிலை அவர்களின் இயல்பான தன்மை என்பன குறித்த புரிதல்களோடு அவர்களை அணுகி அவர்கள் நல்லனவும் அவசியமானவையுமான கருத்துக்களை உள்வாங்கும் தன்மை உடையோராய் மாற்றுவது அந்தப்பக்குவ நிலைக்கு கொண்டு வருவது விசேடமான சந்தர்ப்பங்கள். தேவைகள் தொடர்பாக மாத்திரமன்று சாதாரணமான கற்பித்தலில் கூட அவசியமேற்படுகின்றது.
கற்பித்தல் என்னும் தொழிற்பாடு சிறுவர்கள் குழந்தைகள் என்போருக்கு ஆற்றப்படும் போது மிக விழிப்பாகவும் பொறுப்புணர்வோடும் பற்றுதலோடும் மேற்கொள்ளப்படும் அவசியம் இப்போது உணரப்படுகிறது. (சிறார்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் கைந்நூல்கள் இதனைத் தான் கூறுகின்றன என நினைக்கிறேன்.) இதற்காகச் சிறுவர்களுக்குக் கற்பிக்கும் ஆசரியர்களுக்குரிய பயிற்சியும் ஆற்றுகை ஒன்றுக்கான தயார்படுத்தல் அறிவும் வழங்கப்படுதல் அவசியம்.
ஆசிரியர் என்பவர் வெறும் “சற்றுச் சொல்லி” அல்ல அவர் முன்னால் இருக்கும் பணி மிகப் பெரிது – தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பாலகர்கள் இந்தச் சமூகத்தின் எதிர்காலப் பிரஜைகள் எனும் உள்ளுணர்வோடு தொழிற்படும் கடமை அவர்களுக்கு உண்டு-சம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர்வார்களா?
Posted on May 25, 2020, in Uncategorized. Bookmark the permalink. Leave a comment.
Leave a comment
Comments 0